கூடலூர் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை சீகூர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா, நாடுகாணி, புளியம்பாறை பகுதியில் தொடர்ந்து 60க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி வந்த PM2 மக்னா யானை, கடந்த நவம்பர் 19ம் தேதி பாப்பாத்தி என்பவரை அடித்துக்கொன்றது. தொடர்ந்து, பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தது.
18 நாட்களாக ட்ரோன் மற்றும் நான்கு கும்கி யானைகள் உதவியுடன் மக்னா யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், நேற்று கூடலூர் அருகே உள்ள புளியம்பாறை வனப்பகுதியில், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் நேற்று மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்தனர்.
பின்னர் கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட PM2 மக்னா யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டு, இன்று அதிகாலை சீகூர் வனப்பகுதியில் விடப்பட்டது.








