அரிய நிகழ்வுகளில் ஒன்றாக சூரிய கிரகணம் இன்று மாலை நிகழ உள்ளது. நடப்பு ஆண்டுக்கான கடைசி சூரிய கிரகணமான இது, சென்னையில் சூரிய கிரகணம் 17.13 முதல் 17:42 (மாலை 5.42) மணிக்கு நிகழும். உச்சபட்ச சூரிய கிரகணம் 17.42 மணிக்கு பார்க்ககலாம்.
கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாமா? அந்த நேரத்தில் வெளியே வரலாமா? சாப்பிடலாமா என்பது தான் சாதாரண மக்களின் பொதுவான கேள்வியாக இருக்கிறது. அந்த காலத்தில் சூரிய கண்ணாடிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தால் அரியாத பாமர மக்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கி வைத்திருந்தனர். ஆனால் இப்போது அந்த பயம் தேவையில்லை. ஏனென்றால் நம்மை வழிகாட்டவும், மூட நம்பிக்கைகளை ஒழிக்கவும் அறிவியல் ஆயுதம் இருக்கிறது. அறிவியலைப் பின்பற்றினால் சூரியனையே ஆய்வு செய்யலாம் என்ற நிலைக்கு நாம் முன்னேறி விட்டோம். இந்த நேரத்தில் இன்று நிகழும் சூரிய கிரகணத்தின் போது சாப்பிடலாமா? எப்படி சூரிய கிரகணத்தைப் பார்ப்பது என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்…
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கிரகணத்தின் போது சாப்பிடலாமா?
கிரகணத்தின் போது சூரிய கதிர்கள் பட்டு, எல்லா உணவும் விஷமாக மாறிவிடும் என்றும் அதனால் சூரிய கிரகணத்தின் போதோ, அதற்கு முன்போ தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடக் கூடாது என்று நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். கிரகண காலத்தில் உணவு விஷமாகிவிடுமா? கெட்டுப்போய் விடுமா என்பது தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிக்க – கிரகணத்தை பார்த்தால் ஆபத்தா?
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஸ்கராச்சாரியா ஆய்வு மையத்தின் உதவியோடு மைக்ரோ பயாலஜி ஆய்வாளர்கள் நான்கு பேர், ஸ்ரீகாந்த் என்ற ஆய்வாளர் தலைமையில் 2010ஆம் ஆண்டு ஜனவரி 15ம் நாளில் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின் போது ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கிரகணத்தின் போது சமைத்த உணவுகள் கெட்டுப்போகவில்லை என்பதும் விஷமாகிவிடவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. ஆய்வின் முடிவுகள் ஜேனல் ஆப் இகோ மைக்ரோபயாலஜி என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டன.
கிரகணத்தை எப்படி பார்ப்பது?
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் நிகழ்வு தான் சூரிய கிரகணம். அப்போது சூரியனை சந்திரன் மறைத்துக் கொண்டிருக்கும். அரிய நிகழ்வான சூரிய கிரகணத்தை நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. ஏனென்றால் சூரியனின் ஒளியால் நம் கண்கள் நிரந்தரமாகக் கூட பாதிக்கப்படலாம். சூரிய கிரகணத்தை காண்பதற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ள சூரியகதிர் கண்ணாடி (Solar Filter) களைப் பயன்படுத்தி பார்க்கலாம்.
சூரியகதிர் கண்ணாடிகள் சூரிய ஒளியின் அளவை மட்டுமின்றி, புற ஊதாக் கதிர்களையும் வடிகட்டி பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. தரமான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த கண்ணாடிகளைக் கொண்டு எளிய முறையில் சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம்.
கிரகணத்தை கர்ப்பிணி பெண்கள் பார்க்கலாமா?
கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தான் அதிக கட்டுப்பாடுகள் வீட்டில் இருக்கும். கிரகணத்தின் போது வரும் கதிர்கள் கர்ப்பிணியையும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ஊறு விளைவிக்கும் என்ற நம்பிக்கையே அதற்கு காரணம். இது நம் நாட்டில் மட்டுமில்லை, உலகின் பல்வேறு நாடுகளிலும் கட்டுப்பாடுகள் உள்ளன. அவர்கள் கிரகணத்தைப் பார்க்கலாமா என்பது பற்றியும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மற்ற நாட்களைப் போலவே கிரகணத்தின் போது, கர்ப்பிணிப் பெண்கள் நடமாடலாம், சாப்பிடலாம் என்றும் அதனால் எந்த பாதிப்பும் வராது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சூரிய கிரகணத்தை கர்ப்பிணி பெண்கள் பார்க்க விரும்பினால் மற்றவர்களுக்கு உள்ளதைப் போலவே, சூரியகதிர் கண்ணாடி (Solar Filter) களைப் பயன்படுத்தி பார்க்கலாம். இந்த முன்னெச்சரிக்கையுடன் கிரகணத்தைப் பார்க்கும் போது எந்த புதிய கதிர்வீச்சும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர். அத்துடன் உரிய உபகரணங்கள் இன்றி அதாவது சூரிய ஒளிக் கண்ணாடி இன்றி, சூரிய கிரகணத்தைப் பார்ப்பதைத் தவிர்த்திடுமாறும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
வெறும் கண்ணால் பார்த்தால்…
சூரிய கிரகணம் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்றும் அப்படி பார்த்தால் பார்வை பறிபோகும் ஆபத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
சூரிய கிரகணம் உண்மையும் கட்டுக்கதைகளும்
சூரிய கிரகணத்தன்று, அதாவது நேற்று மாலை 3 மணிக்கு, பகுத்தறிவாளர் கழகம் சார்பில், பகுத்தறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, சூரிய கிரகணத்தின் போது உணவு உண்ணும் நிகழ்ச்சி, சூரிய கிரகண அறிவியல் விளக்கக் கூட்டமும் நடத்தப்பட்டது. அத்தோடு சூரிய கிரகணம் உண்மையும் கட்டுக்கதைகளும் என்ற தலைப்பில், தமிழ்நாடு வானியல் அறிவியல் சங்கத்தின் மாநில கருத்தாளர் மற்றும் ஆலோசகர் முனைவர் கு. ரவிக்குமார் ஒளி, ஒலி காட்சிகள் மூலம் விளக்கம் அளித்தார்.
– ஜெயகார்த்தி