தூத்துக்குடி விமானநிலையத்தில் பயணிகளை இறக்கிவிட செல்லும் கார்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடகை கார் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விட செல்லும் கார்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பயணிகளை இறக்கிவிடச் செல்லும் வாகனங்களுக்கு கட்டாயமாக கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது. இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளை இறக்கிவிட குறிப்பிட்ட கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தைக் கடந்தும் விமான நிலையத்தில் இருந்தால் மட்டுமே கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது.
ஆனால் தூத்துக்குடி விமான நிலையத்தில் மட்டுமே உள்ளே சென்றாலே கட்டாய கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாடகை கார் ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில், மத்திய அரசும் விமான நிலைய நிர்வாகமும் கட்டண வசூல் முறையை உடனடியாக ரத்து செய்து மற்ற விமானநிலயங்களில் வசூலிக்கப்படுவதுபோல் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடகை கார் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







