உணவகங்களை மூடுமாறு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வற்புறுத்துவதாக சென்னை ஹோட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உணவகங்கள் என்பது நினைத்தபோது மூடுவதும் திறப்பதுமான தொழில் அல்ல என்றும் உணவகங்கள் அத்தியாவசிய தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.
கொரோனா காலத்தில் 40 சதவிகித உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனவும் மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் உணவகங்களை மூடுமாறு வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
உணவகங்கள் மூடப்பட்டால் பொதுமக்கள் உணவு கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளாவார்கள் என்றும் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி அவதிப்படுவார்கள் எனவும் கூறியுள்ளது. எனவே உணவகங்கள் எப்போதும்போல் செயல்படவும், உணவகங்கள் மூடப்படாமல் இருக்கவும் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சென்னை ஹோட்டல்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.








