சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் பிப்ரவரி 2ம் தேதி கலைவாணர் அரங்கத்தில் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். அவரது உரையில், அரசு திட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இடம்பெறும்.
மேலும், அரசு நிறைவேற்ற இருக்கும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு கூடுகிறது. வரும் 2ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அதில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.







