அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது, என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கொளத்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஜி.கே.எம்.காலனியில் சமுதாய நல கூடத்தின் கட்டுமானப் பணி குறித்து ஆய்வு செய்தார். கொளத்தூர் தொகுதிக்குள்பட்ட ஜி.கே.எம் காலனியில் புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு துவக்கப் பள்ளி, மதுரை சாமி மடத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், நேர்மை நகர் மயான பூமியில் புதியதாக கட்டப்பட்டுள்ள 16ஆம் நாள் நீத்தார் நினைவு மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இதையும் படியுங்கள் : #GoldRate | புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம்!
மேலும், ஜி.கே.எம் காலனியில் ஜம்புலிங்கம் பிரதான சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேப்பர் மில்ஸ் சாலையில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் புதியதாக அமையவுள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகம் கட்டப்படவுள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து, செய்தியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி கேட்டனர். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா என்றும் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்பது குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது” எனத் தெரிவித்தார்.
அமெரிக்க பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை கோரியது தொடர்பான கேள்விக்கு, “அமெரிக்க பயணம் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெளிவான அறிக்கை வழங்கிவிட்டார் என்றார்.
வடகிழக்கு பருவமழை குறித்த கேள்விக்கு, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்” என்றும் முதலமைச்சர் மு.க.ல்டாலின் கூறினார்.







