தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 பதவி இடங்களுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது
கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உளளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதற்கிடையே ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களில் சிலர் உயிரிழந்ததாலும், பதவி விலகியதாலும் அந்த இடங்கள் காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கிராமப்புறங்களில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என 498 இடங்கள் காலியாக உள்ளன. நகர்ப்புறங்களில் மாநகராட்சி, கவுன்சிலர், நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 12 பதவிகள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இந்த 510 இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி இடைத்தேர்தல் வாக்குப் பதிவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதற்றமான வாக்கு ச்சாவடிகளை சிசிடிவி கேமிராக்கள் மூலமாக நேரடியாக தேர்தல் ஆணையம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா