சென்னை அடையாறு, இந்திரா நகர், முதல் நிழல் சாலை சந்திப்பில் கடந்த திங்கள் கிழமை சாலையின் ஓரத்தில் மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அந்த மூட்டையில் இருந்து ரத்தம் வெளியானகி கொண்டிருந்ததால் அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அடையாறு போலீசார் மூட்டையை திறந்து பார்த்தபோது, அதில் அடையாளம் தெரியாத ஒருவரின் கொலை செய்யப்பட்ட உடல் இருந்தது தெரிய வந்துள்ளது. உடல் முழுவதும் வெட்டப்பட்டு இருந்த அந்த உடலைக் கைப்பற்றிய, காவல் துறையினர் உடல் கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சிசிடிவி காட்சிகளை கொண்டு அடையாறு காவல்துறையினர் செய்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் குமார் (24) என்பதும் அவர் தனது மனைவி புனிதா குமாரி மற்றும் பெண் குழந்தையுடன் தங்கி இருந்து செக்யூரிட்டி வேலை தேடி வந்ததாகவும் தெரியவந்தது. மேலும் கௌரவ் குமாரின் மனைவி மற்றும் பெண் குழந்தை எங்கே சென்றார்கள் என்றும் தெரியாமல் இருந்தது.
தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அந்த ஐவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் படி கௌரவ் குமார் மற்றும் அவரது மனைவி புனிதா குமாரி மற்றும் குழந்தை என மூவரையும் கொலை செய்து விட்டதாகவும் புனிதா குமாரியின் உடலை பெருங்குடியில் இருக்கக்கூடிய குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைத் தொட்டியிலும், குழந்தையின் உடலை மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயிலும் வீசியதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதிகளில் உடல்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட கும்பலானது கௌரவ் குமாரின் மனைவி வனிதா குமாரியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், இது தொடர்பாக கௌரவ் குமார் மற்றும் கும்பல் இடையே ஏற்பட்ட மோதலில் அந்த கும்பல் கௌரவ் குமார், அவரது மனைவி புனிதா குமாரி மற்றும் அவரது குழந்தை ஆகியோரை கொலை செய்திருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கணவன், மனைவி மற்றும் குழந்தை என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை பிகாரை சேர்ந்தவர்கள் கொலை செய்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







