குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி என்பது, 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையின் அம்சம் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பைச் சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுருந்தார். அதன்படி அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளான இன்று மதுரையில் கீழ அண்ணாதோப்பு பகுதியில் அமைந்துள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், அண்ணாவின் பிறந்தநாளில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைப்பதில் பெரிதும் மகிழ்ச்சியாக உள்ளது. காலை உணவு உண்ண முடியாத காரணத்தால் குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் வருகைப் பதிவு மிகக் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில், பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவை உறுதி செய்யவே இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளோம் எனப் பேசினார்.
காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தது ஏன்? – மனம் திறந்த முதலமைச்சர்
மேலும் இந்தத் திட்டத்தைச் சலுகை, தர்மம், இலவசம் என யாரும் எண்ணக்கூடாது. இது அரசின் தார்மீகக் கடமை. பசிப்பிணி நீங்கினால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருவர். இதனால் கல்வியில் தமிழ்ச் சமூகம் மேம்படும் எனப் பேசினார்.
2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை மதிய உணவோடு காலை சிற்றுண்டி குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்துகிறது. தாய்மொழி உணர்வோடு கூடிய உலகத்தரம் வாய்ந்த கல்வி, காலை & மதிய உணவோடு கற்பிக்கப்படுவதனால் வளமான, வலிமையான பாரதத்தை எதிர்கால சந்ததிக்கு உருவாக்குவோம்.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) September 15, 2022
இது தொடர்பாகத் தெலுங்கான ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சொந்தரராஜன் டிவிட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை மதிய உணவோடு காலை சிற்றுண்டி குழந்தைகளுக்குக் கொடுக்க வலியுறுத்துகிறது. தாய்மொழி உணர்வோடு கூடிய உலகத்தரம் வாய்ந்த கல்வி, காலை & மதிய உணவோடு கற்பிக்கப்படுவதனால் வளமான, வலிமையான பாரதத்தை எதிர்கால சந்ததிக்கு உருவாக்குவோம் என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
– பரசுராமன்.ப