‘வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவற்றைத் தகர்த்து முன்னேறுங்கள்’ – முதலமைச்சர்

பழமைவாதத்தைப் புறந்தள்ளி, புதியவற்றை ஏற்றுப் பகுத்தறிவுடன் செயல்பட்டால் தான் பெறும் பட்டத்துக்குப் பெருமை எனத் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று சென்னை சென்னை கிண்டியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.…

பழமைவாதத்தைப் புறந்தள்ளி, புதியவற்றை ஏற்றுப் பகுத்தறிவுடன் செயல்பட்டால் தான் பெறும் பட்டத்துக்குப் பெருமை எனத் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று சென்னை சென்னை கிண்டியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகளாவிய செஸ் ஒலிம்பியாட் போட்டியைப் பிரதமர் நேற்று துவக்கிவைத்திருக்கிறார், செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் நடப்பது இதுவே முதன்முறை. உலகளவில் இந்தியாவின் மதிப்பு வானளாவிய உயர்வை அடைந்திருக்கிறது எனக் கூறினார்.

அப்போது பிரதமருக்கு மீண்டும் நன்றி தெரிவித்த அவர், அண்மையில் வெளியான NIRF தரவரிசையில் இடம்பெற்ற பெருவாரியான உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை எனவும், கையில் பட்டத்துடனும், கண்களில் கனவுகளுடனும் அமர்ந்துள்ள மாணவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அண்ணாவின் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் இது எனக் குறிப்பிட்ட அவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேரறிஞர் அண்ணா பேசிய வரிகளை நினைவுகூருகிறேன் எனக் கூறி, பட்டத்துடன் படிப்பு முடிந்துவிடுவதில்லை, பட்டங்கள் வேலைவாய்ப்புக்கானது அல்ல, அறிவாற்றலை மேம்படுத்துவதற்கானது எனத் தெரிவித்தார்.

இந்தியாவின் பிரதமர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டிருப்பது உங்களுக்குக் கிடைத்துள்ள பெருமை என மாணவர்களை நோக்கித் தெரிவித்த அவர், அறிவாற்றல் தான் அனைத்திலும் வலிமையானது எனவும், சாதி, மதம், பதவி, அனுபவம் ஆகிய அனைத்தின் தன்மையும் வேறுபடும் எனக்கூறிய அவர், அறிவு மட்டுமே ஒரே அளவுகோலில் வைத்துப் பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘குற்றாலம் சாரல் திருவிழா; ஆகஸ்ட் 5ம் தேதி தொடக்கம்!’

கல்விக்கண்ணைத் திறப்பதைப் பெரும்பணியாக எண்ணியே திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், படிப்போடு முடிந்துவிடாமல் வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்தரம், சமூக வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்யவே தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது தெரிவித்தார்.

தொழில் தொடங்க உகந்த, சிறந்த மாநிலங்கள் பட்டியலில் 14-வது இடத்திலிருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது தமிழ்நாடு எனத் தெரிவித்த முதலமைச்சர், பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஆர்வமாக முன்வருவதாகவும், தொழில் நிறுவனங்களுக்கேற்ப இளைஞர்கள் தயாராக வேண்டும் எனக் கோரினார்.

மேலும், வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவற்றைத் தகர்த்து, அனைத்துவகையிலும் உங்களை தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள் எனக் கூறிய முதலமைச்சர் பழமைவாதத்தைப் புறந்தள்ளி, புதியவற்றை ஏற்றுப் பகுத்தறிவுடன் செயல்பட்டால் தான் பெறும் பட்டத்துக்குப் பெருமை எனவும், திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் பொற்காலத்தை உருவாக்கத் தொடர்ந்து அயராது உழைப்போம் எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.