தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி ஏமாற்றுபவர்கள் பெருகி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடும் நபர்களை கண்டறிந்து அவர்களை குறிவைத்து பெரும்பாலான ஏமாற்று வேலைகள் அரங்கேறி வருகிறது.
பெரிய பெரிய நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி, இலவசமாக பணம், பொருட்கள் தருவதாக கூறி தனிப்பட்ட சமூக வலைத்தள கணக்குகள் ஹேக் செய்யப்படுகிறது. இதனை உண்மை என நம்பி ஏராளமானோர் முகம் தெரியாத மர்ம நபர்களிடம் பணத்தையும், தனது சுய விபரங்களையும் பறிகொடுக்கின்றனர். இதனை தடுக்க காவல்துறை மற்றும் சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
காவல்துறை பெயரிலேயே இது போன்ற ஏமாற்று வேலை நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு காவல்துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயரை பயன்படுத்தி அமேசான் அன்பளிப்பு கூப்பன்களை கேட்டு சிலரது வாட்ஸ் அப் எண்ணுக்கு மர்ம நபர்களிடம் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியது. இதனை சுதாரித்து கொண்ட தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள டிஜிபி சைலேந்திர பாபு, தமிழகத்தில் Boss Scam அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கை இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் பேசுவது போன்ற குறுஞ்செய்தி மற்றும் போன் அழைப்புகள் வருகின்றன. அதில் தான் ஒரு மீட்டிங்கில் இருப்பதாகவும் உடனடியாக அமேசான் பரிசு கூப்பன் அனுப்ப வேண்டும் என்று அழைப்புகள் வருகின்றன. தொடர்ந்து இது போன்று பரிசு கூப்பன்கள் கேட்டு அழைப்புகள் வந்த பின்னர் தான் சம்பந்தப்பட்ட நபர் தாம் ஏமற்றப்பட்டது தெரியவருகிறது.
இது போன்று அரசு அதிகாரிகள், தனியார் நிறுவன அதிகாரிகள் பெயரையும், புகைப்படைத்தை பயன்படுத்தி இது போன்ற Boss scam மோசடிகள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திர பாபு கேட்டுக் கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன் தனது பெயரில் அமேசான் பரிசு கூப்பன்கள் கேட்டு குறுஞ்செய்தி வந்தால் எச்சரிகையாக இருக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது வீடியோ பதிவை அவர் வெளியிட்டு உள்ளார்.