பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அனைத்து வகை பிரிவினருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் எம்.பி தெரிவித்துள்ளார்.
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “18 – 60 வயதுப் பிரிவினருக்கு கொரோனா மூன்றாவது (பூஸ்டர்) டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கியுள்ளன. இவை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்படும் எனவும், ரூ.375 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது, இது நியாயமற்றது எனவும்,
ரூ.375 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் கூட சில மருத்துவமனைகளில் பழைய கட்டணமான ரூ.1450 வசூலிக்கப்படுகிறது. சில மருத்துவமனைகளில் புதிய கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது. ஏழைகளால் இவ்வளவு தொகை செலுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாது என கேள்வி எழுப்பியுள்ள அவர்,
கொரோனா நான்காவது அலை ஜூலையில் தொடங்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது, பல நாடுகளில் ஓமைக்ரானின் XE திரிபு பரவத் தொடங்கியுள்ளது. அவற்றைத் தடுக்க அனைத்து மக்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட வேண்டியது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனாவுக்கான முதல் இரு கட்ட தடுப்பூசிகள் எவ்வாறு இலவசமாக வழங்கப்பட்டனவோ, அதே போல் மூன்றாவது கட்ட தடுப்பூசியும் அனைத்து வகை பிரிவினருக்கும் இலவசமாகத் தான் வழங்கப்பட வேண்டும். இதை மத்திய அரசிடம் தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.








