கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் வீடுகளுக்கு சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்த 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று நாடு முழுவதும் தொற்று பாதிப்பு சற்று குறைந்த எண்ணிக்கையில் பதிவானது.
இந்நிலையில், 1,68,063 பேர் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 6.4% குறைவாகும்.
இச்சூழலில் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று (ஜன.10) முன்களப் பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது, சென்னையில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள தகுதியானவர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்திருந்தது. தற்போது இப்பணியை மேற்கொள்ள 15 சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும், 73,000 பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் நேற்று மட்டும் 1,041 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது மாநகராட்சியின் அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: