மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.1.85 கோடி மதிப்பில் புத்தகப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து புத்தகங்களை பார்வையிட்டார். 10 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும் வகையில் இந்த புத்தக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பொது நூலக இயக்ககம் சார்பில் ரூ. 29.80 கோடி ரூபாய் செலவில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்கள், பரமக்குடி முழுநேர கிளை நூலகக் கட்டடம் மற்றும் 70 சிறப்பு நூலகங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் உருவாக்கப்பட்ட 84 நூல்களை வெளியிட்டு, தமிழ்நாடு பாடநூல் கழக நூல்கள் விற்பனைக்கான மின்வணிக இணையதளத்தையும் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.