மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை – மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை ஒழுங்குமுறை வாரியத்தின் (SEBI) தலைவராக பணியாற்றி வந்த மாதபி பூரி புச் மீது, ஹிண்டன்பர்க் அறிக்கையில் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதில், அதானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாகவே அதானியின் சந்தேகத்துக்குரிய நிறுவனங்கள் மீது செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

மாதபி பூரியின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், அதானி குழுமம் மீதான விசாரணை குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று ஹிண்டன்பர்க் அறிக்கை தெரிவித்தது. தன் மீதான குற்றச்சாட்டை மாதபி பூரி புச் மறுத்தார். ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை எனவும், எங்களுடைய வாழ்க்கையும், நிதி பரிமாற்றங்களும் திறந்த புத்தகம்போல வெளிப்படையானவை எனவும் மாதபி புரி தெரிவித்தார்.

மேலும், ஹிண்டன்பர்க்கின் முந்தைய அறிக்கை தொடர்பாக செபி நோட்டீஸ் அனுப்பி இருந்ததாகவும், அதற்கு பழிவாங்கும் நோக்கில் செபியின் பெயரை கெடுக்கும் வகையில் தற்போது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது என்று மாதபி புரி மற்றும் அவரது கணவர் இருவரும் அறிக்கை வெளியிட்டிருந்தனர். மாதபி பூரி புச், விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. அவர், 2017-ம் ஆண்டு முதல் இதுவரை அவர் ரூ.16.8 கோடி பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனிடையே, மாதவி பூரி புச்-க்கு எதிரான முறைகேடு புகார்கள் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணையை தொடங்கியது. அவரிடம் விசாரிக்க பொதுக் கணக்குக் குழு சம்மன் அனுப்பியது. அதில், மாதபி பூரி புச் நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்காக கடந்த அக்.24 அன்று பொதுக் கணக்கு குழு முன் செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் உறுப்பினர்கள் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் மும்பை, தானே பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் சனப் ஸ்ரீவாஸ்தவ் என்பவர் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் ‘1992 ஆம் ஆண்டு SEBI சட்டம் மற்றும் அதன் ஒழுங்குமுறைகளின் கீழ் இணங்காமல் ஒழுங்குமுறை அதிகாரிகள் குறிப்பாக செபியின் ஒத்துழைப்புடன் பங்குச் சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாத தெரிவித்திருந்தார்.

மேலும், இதுகுறித்து பலமுறை காவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளை அணுகியும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தனது மனுவில் கூறி இருந்தார்.

Summons to #SEBI Chairperson Madhabi Puri Buch - Parliamentary Public Accounts Committee in action!மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத்ராவ் பங்கர் ‘பங்குச்சந்தை மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் ஒழுங்குமுறை குறைபாடுகள் மற்றும் கூட்டுச் சதிக்கு ஆதாரம் உள்ளதால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை தேவை’ என்று தெரிவித்தார். மேலும், செபி முன்னாள் தலைவர் மாதபி பூரி புச் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத்ராவ் உத்தரவிட்டார்.

இந்நிலையில்  சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி, செபியின் முன்னாள் தலைவர் மாதபி பூரி புச் உள்ளிட்ட 6 பேரும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் மாதபி பூரி புச் மற்றும் அஸ்வானி பாட்டியா, அனந்த் நாராயண் ஜி மற்றும் கமலேஷ் சந்திர வர்ஷ்னி ஆகியோருக்காக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷிவ்குமார் டிகே  சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு, மனுதாரரின் மனுக்களுக்கு பதிலளிக்கும் விதமாக தனது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் வழங்கி  உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.