வார விடுமுறையில் சொந்த ஊர்களுக்குச் செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகள் – போக்குவரத்துறை அறிவிப்பு!

தொடர் விடுமுறையை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வார விடுமுறை என்பதால் சென்னை போன்ற பெருநகரங்களில் வேலை நிமித்தமாக தங்கயிருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவர். இதனால் வழக்கத்திற்கு மாறாக பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும். இதனை தவிர்க்கும் விதமாக வார விடுமுறை தினங்களில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துறை கூடுதல் பேருந்துகளை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

”சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வருகிற  07ம் தேதி அன்று 265 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல இதே பகுதிகளுக்கு 08ம் தேதி அன்று 270 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. மேலும்  சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 07 அன்று 51 பேருந்துகளும , 08 அன்று 51 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு முக்கிய பேருந்து நிலையமான மாதாவரத்திலிருந்து 07 அன்று 20 பேருந்துகளும் 08 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வார விடுமுறை முடிந்து திரும்பும் வசதியாக ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில் சொந்த ஊர்களுக்குச் செல்ல வெள்ளிக்கிழமை அன்று 8,490 பயணிகளும் சனிக்கிழமை 3,058 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,347 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.