மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தியான மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளாரின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் விவசாயக் குடும்பத்தில் கடந்த 1941-ம் ஆண்டு பிறந்தவர் பங்காரு அடிகளார். பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், ஆசிரியையாகப் பணியாற்றிய லட்சுமி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அன்பழகன், செந்தில்குமார் என இரு மகன்கள் உள்ளனர்.
1970-ம் ஆண்டு முதல் சக்தி பீடத்தை நிறுவி அருள்வாக்குக் கூறிவந்த பங்காரு அடிகளார், பெண்கள் கருவறைக்குள் சென்று வழிபடலாம் என்பதையும், எல்லா நாட்களிலும் எல்லாப் பெண்களும் கோயிலுக்குள் சாமியை வழிபடலாம் என்ற புரட்சியையும் ஏற்படுத்தினார். கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி, இறுதி காலம் வரை ஆன்மிகத்துக்கும் கல்விக்கும் தொண்டாற்றி வந்தார்.
இதனிடையே நேற்று ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனரான பங்காரு அடிகளார், தனது 83வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். கடந்த ஓராண்டாகவே சிகிச்சை பெற்று வந்த பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார். அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவருடைய உடலுக்கு அரசியல் பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி மற்றும் மகன்களுக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார்.
முதலமைச்சர் அஞ்சலி செலுத்திச் சென்ற பின்னர் அடிகளாரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலில் உள்ள தியான மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பெண்கள் பலர் கதறி அழுது கொண்டே பங்காரு அடிகளாரின் உடலை அனுப்பி வைத்தனர்.
பங்காரு அடிகளாரின் உடல் கோயிலுக்குள் எடுத்து செல்லப்பட்ட நிலையில், ‘அம்மா அம்மா’ என்று அழுதவாறு ஏராளமான பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர். ஆதிபராசக்தி மருத்துவம் மற்றும் கலை, அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் பங்காரு அடியாரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 2000-க்கும் மேற்பட்ட போலீசார் மேல்மருவத்தூரில் குவிக்கப்பட்டுள்ளனர். அஞ்சலி செலுத்த வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.








