இந்தோனேசியாவில் படகு எரிந்த விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு இந்தோனேசியாவில் இருந்து நுசா தெங்கரா பகுதியில் இருந்து 240 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று கலாபாஹி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென படகு தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் படகில் இருந்தவர்கள் நீரில் குதித்து தப்பிக்க முயன்றனர்.
உடனடியாக அந்த பகுதியில் பயணித்து கொண்டிருந்த மீட்பு கப்பல் உட்பட கப்பல்களில் இருந்த மீட்புக்குழுவினர் நீரில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 223 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 17 பேர் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், படகு தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் தீவுக்கூட்டம் அதிகம் என்பதால் அங்கு மக்கள் படகுசவாரி மேற்கொள்வது அதிகம். இந்த பகுதியில் அடிக்கடி படகு விபத்துக்குள்ளாவதாக கூறப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு, 200 பேர் பயணம் செய்த படகு விபத்துக்குள்ளானதில் 167 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.







