தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மானிய விலையில் படகு இயந்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே சிங்கி துறை, கொம்புத்துறை, அமலிநகர் ஆலந்தலை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 25 மீனவர்களுக்கு, மானிய விலையில் நாட்டுப் படகுகளுக்கு வெளிப்பொருத்தும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீனவர்களுக்கு நாட்டு படகுகளுக்கான இயந்திரங்களை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீனவர்களுக்கு வேண்டிய அனைத்து திட்டங்களும் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் மீனவர்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். தற்போது மானிய விலையில் படகுகளுக்கான இயந்திரங்கள் பெறும் மீனவர்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகுதான் மீண்டும் மானிய விலையில் இயந்திரங்கள் பெற முடியும் என்ற நிலை உள்ளது. இதை மாற்றும் வகையில் இரண்டு ஆண்டுகளில் மானிய விலையில் படகுகளுக்கான இயந்திரங்கள் வழங்குவதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது என்றார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
இதே போல தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தரமான மீன் சந்தை அமைக்கப்பட்டு சில்லரை விற்பனையில் மீன்கள் விற்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.