கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்கள் அடுத்த 56 நாட்களுக்கு பிறகுதான் இரத்த தானம் செய்ய வேண்டும் என தேசிய இரத்த மாற்றம் கவுன்சில் தெரிவித்துள்ளது.
தேசிய இரத்த மாற்றம் கவுன்சில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி நடத்திய கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணையை போட்டுக் கொண்ட பிறகு அடுத்த 28 நாட்கள் கழித்துதான் எந்த ஒரு நபரும் இரத்த தானம் செய்ய வேண்டும் என பேசப்பட்டது.
அதாவது, தடுப்பூசியின் முதல் தவணை செலுத்திக் கொண்ட அடுத்த 56 நாட்கள் கழிந்த பிறகே இரத்த தானம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது . இதுகுறித்து அதிகாரப்பூர்வ உத்தரவை தேசிய இரத்த மாற்றம் கவுன்சில் இயக்குநர் சுனில் குப்தா கடந்த மார்ச் 5ஆம் தேதி வெளியிட்டார்.
தடுப்பூசி 1,2 தவணைகளின் இடைவேளை அதிகரிப்பு:
இந்நிலையில் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி முதல் தவணைக்கும் இரண்டாவது தவணைக்கும் இருந்து வந்த இடைவேளை 28 நாட்களை 6-8 வாரங்கள் வரை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த இடைவேளை நீட்டிப்பு கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு மட்டும் பொருந்தும் என்றும் கோவாக்சின் தடுப்பூசிக்கு இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







