புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற பிரான்ஸ் நாட்டு தேசிய தின
கொண்டாட்டம் வானவேடிக்கையின் போது பொதுமக்கள் மீது வெடி பாய்ந்ததில் 3 பேர் காயம் அடைந்தனர்.
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் பிரெஞ்சு மக்கள் அதிகம் வசிக்கும் புதுச்சேரியில் நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இத்தினத்தை நினைவு கூறும்வகையில் புதுச்சேரி கடற்கரையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்த இந்திய வீரர்கள் மற்றும் பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து இரவில் கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் அருகே வண்ணமயமான வான வேடிக்கை நடைபெற்றது. இதனை காண்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர்.
வான வேடிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் பார்வையாளர்கள் மீது வெடி பாய்ந்தது. இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.





