தன்னுடைய கருத்துக்கு தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்து செய்திக்குறிப்பு வெளியிட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அண்ணாமலை கருத்து தெரிவித்ததற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு காவல்துறை இன்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும். காவல்துறையில் பணிபுரியும் சகோதர சகோதரிகள் மீது எங்களுக்கு பெருமதிப்பும் மரியாதையும் உள்ளது. ஆனால் காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசுக்கு சாதகமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை நாங்கள் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே. ஆனால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்கள். இதில் ஆச்சரியமில்லை. காவல்துறையின் மாண்பை குறைத்து விட்டதாக என் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு பதிலாக இது போன்ற சம்பவங்கள் எவ்வாறு நடந்தது என்பதனை அவர்கள் ஆராய வேண்டும். பல பெருமைகளுக்கு பெயர் போன தமிழக காவல் துறையில் அரசியலைப் புகுத்தியுள்ளது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.







