படகின் மூலம் சென்று மக்கள் வெள்ளத்தில் படும் பிரச்னையை கூறுவது தவறு கிடையாது என அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த கனமழையால் தலைநகரே வெள்ளக்காடாக மாறியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் புஷ்பா நகர் மக்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, சென்னை வெள்ள மீட்பு மற்றும் நிவாரணத்திற்கான எங்களுடைய களப்பணி இன்னும் 2 நாட்களுக்கு தொடரும். தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை. மாநகராட்சி பணி மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
மத்திய அரசு கண்டிப்பாக தமிழ்நாடு அரசிற்கு உதவி செய்யும் என்று தெரிவித்த அண்ணாமலை, கொளத்தூரில் படகில் சென்று வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தது குறித்தும் விளக்கம் அளித்தார். “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிளில் செல்கிறார், கால்மேல் கால் போட்டுக்கொண்டு ரஜினிகாந்த் பாணியில் செயல்படுகிறார். நாங்கள் படகின் மூலம் சென்று மக்கள் வெள்ளத்தில் படும் பிரச்னையை கூறுவது தவறு கிடையாது” என்று கூறினார்.
முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் உள்ள தண்ணீரானது இடுப்பளவிற்கு இருந்தது, நாங்கள் படகை எடுத்துச் சென்ற பின்புதான் கொளத்தூர் தொகுதிக்கு தேவையானவை செய்துகொடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.








