பீகார் சட்டமன்ற தேர்தல் | மதியம் 1 மணி நிலவரப்படி 42.31% வாக்குகள் பதிவு!

பீகாரில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 121 சட்டமன்ற தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் 18 மற்றும் 19 வயதானவர்கள் ஆவர். வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து காலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வரும் நிலையில் காலை 9 மணி வரை 121 சட்டமன்ற தொகுதிகளில் 13.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தொடர்ந்து, காலை 11 மணி நிலவரப்படி, பீகாரில் 27.65 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மதியம் 1 மணி நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பீகார் மாநிலத்தில் 121 சட்டமன்றத் தொகுதிக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.31% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும 11ம் தேதியும், 14ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.