பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் வன்கொடுமை புகார்

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் பெண் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இந்தி தயாரிப்பாளர் பூஷன் குமார். இவர் டி-சீரிஸ் நிறுவனம் மூலம் ஏராளமான திரைப்படங்களை தயாரித்துள்ளார்.…

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் பெண் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இந்தி தயாரிப்பாளர் பூஷன் குமார். இவர் டி-சீரிஸ் நிறுவனம் மூலம் ஏராளமான திரைப்படங்களை தயாரித்துள்ளார். இப்போதும் தயாரித்து வருகிறார். தனுஷ், அக்‌ஷய்குமார், சாரா அலிகான் நடிக்கும் ’அட்ரங்கி ரே’, பிரபாஸ் நடிக்கும் ’ராதே ஷ்யாம்’, ’ஆதிபுருஷ்’ உட்பட பல படங்களை இப்போது தயாரிக்கிறார்.

இவர் மீது 30 வயது மாடல் ஒருவர், மும்பை அந்தேரி மேற்கு போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில், தன்னை கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டு வரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பூஷன்குமாரின் டி சீரிஸ் நிறுவனம் இந்த புகாரை மறுத்துள்ளது. அந்த மாடல், கடந்த மார்ச் மாதம் பூஷன்குமாரை சந்தித்ததாகவும் வெப்சீரிஸ் ஒன்றும் பண உதவி செய்யுமாறு கேட்டதாகவும் ஆனால், பூஷன் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அவர் மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும் இது தொடர்பாக டிசீரிஸ் நிறுவனம் ஏற்கனவே புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.