கீழடியில் நெற்பயிர் சாகுபடி செய்ததற்கான சான்று கிடைத்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பினை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், கீழடி, கொடுமணல் மற்றும் பொருந்தல் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் தமிழ் எழுத்துக்களின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்று அறிவியல் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 2600 ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ்க் குடிமக்கள் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கினர் என்பது நமக்கு பெருமையளிக்கக்கூடிய செய்தியாகும் என்றார்.
கீழடிக்கு அருகே அகரம் அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட மண்மாதிரிகளை மகரந்தம் மற்றும் பைட்டோலித் முறையில் பகுப்பாய்வு செய்ததில், அங்கே நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன என குறிப்பிட்ட அவர், சிவகளை பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அங்கே நீர் செல்லும் செங்கல் வடிகாலில் நன்னீர் சென்றுள்ளதாகவும், தேக்கிவைக்கப்பட்ட நீர்நிலையிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டதாகவும் ஆய்வில் தெரிய வருகிறது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை என்ற பாறை ஓவியங்கள், புதிய கற்காலக் கருவிகள் என அரியவகை கிடைக்கப்பெறுள்ளன. இதன்மூலம் தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவி வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என கூறினார்.
தொடர்ந்து, தமிழர்கள் தடம்பதித்த இந்தியாவின் பிறபகுதிகளிலும், கடல் கடந்து வெற்றி கொண்ட நாடுகளிலும் அகழாய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு, கேரளாவின் பட்டணம், கர்நாடக மாநிலத்திலுள்ள தலைக்காடு, ஆந்திர மாநிலத்தின் வேங்கி, ஒடிசாவிலுள்ள பாலூர் பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் எனவும் தெவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட ஏராளமான பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும், சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துகளுக்குமான உறவை ஒப்பீடு செய்து, ஆய்வு செய்திடும் திட்டத்தை தமிழ்நாடு தொல்லியல் துறை இந்தாண்டு முதல் மேற்கொள்ளும் என்றார்.
Advertisement: