புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் தென்னாப்பிரிக்காவுக்கு வீரர்களை அனுப்பும் முன், இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய அரசிடம் ஆலோசனை பெற வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ், கொரோனாவை விட கொடுமையானது என்பதால், உலகம் மீண்டும் அச்சத்தில் இருக்கிறது. பி.1.1.529 என்ற புதிய வைரஸுக்கு கிரேக்க எழுத்து முறைப்படி ஒமிக்ரான் (Omicron) என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வைரஸ் எட்டிப் பார்த்திருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுவரை 60 பேருக்கு இந்த உருமாறிய வைரஸ் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை உலகில் கண்டறியப்பட்டுள்ள வைரஸ்களில் இதுதான் மிக மோசமானது என்கிறார்கள். இதனால், பல்வேறு நாடுகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. அங்கிருந்து இந்தியா வரும் விமானப் பயணிகளிடம் கடுமையான பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட இருக்கிறது. 3 டெஸ்ட், 3 ஒரு நாள், 4 டி-20 போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் ’ஒமிக்ரான்’ மிரட்டுவதால் இந்த தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு கிரிக்கெட் வீரர்களை அனுப்பு முன் இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய அரசிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று மத்திய மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘கிரிக்கெட் வாரியம் மட்டுமல்ல, எந்த விளையாட்டு வாரியமும் வைரஸ் பாதிப்புள்ள நாடுகளுக்கு வீரர்களை அனுப்பும் முன் மத்திய அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டும். வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நாடுகளுக்கு அணியை அனுப்புவது சரியானதல்ல. பிசிசிஐ எங்களிடம் கேட்டால் அதுகுறித்து ஆலோசிப்போம்’ என்றார்.