மணிமுத்தாறு அருவியில் 3வது நாளாகக் குளிக்கத் தடை!

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மணிமுத்தாறு அருவியில் 3வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் வனச்சரகப்…

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மணிமுத்தாறு அருவியில் 3வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் வனச்சரகப் பகுதியில் அமைந்துள்ளது மணிமுத்தாறு அருவி. தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, மாஞ்சோலை மலைப் பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் வியாழக்கிழமை காலை மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. அருவியைப் பார்வையிட மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு குறையும் வரை சுற்றுலாப் பயணிகளுக்குக் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அண்மைச் செய்தி: ‘குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!’

இந்நிலையில், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் காக்காச்சி நாலுமுக்கு, மாஞ்சோலை போன்ற பகுதிகளில் இன்றும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினர் 3வது நாளாகத் தடை விதித்துள்ளனர். விடுமுறை தினம் என்பதால் அருவிக்குச் செல்ல திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.