இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த விசைப்படகு – 5 பேர் கைது!

இந்திய பெருங்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த விசைப்படகு மற்றும் 150 கிலோ மீன்களை பாதுகாப்பு படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான வஜ்ரா…

இந்திய பெருங்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த விசைப்படகு மற்றும் 150 கிலோ மீன்களை பாதுகாப்பு படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான வஜ்ரா என்ற கப்பலில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த விசைப்படகு ஒன்று அத்துமீறி நுழைந்தது தெரியவந்தது. மீன்பிடித்துக் கொண்டிருந்த அந்த விசைப்படகை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

பின்னர் கடலோர பாதுகாப்பு படையினர் அந்தப் படகில் இறங்கி விசாரணை செய்தனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அந்த படகில் பெனில், விக்டர் இமானுவேல், ஆண்டனி ஜெயராஜா, ரஞ்சித், ஆனந்தகுமார் ஆகிய ஐந்து மீனவர்கள் இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இலங்கை நீர்க்கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், கடந்த 17-ம் தேதி மீன் பிடிக்க வந்ததாகவும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து படகு மற்றும் ஐந்து மீனவர்களையும் கடலோர பாதுகாப்பு படையினர் தருவைகுளம் கடற்பகுதிக்கு கொண்டு சென்று கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்களை கைது செய்ததுடன் படகு மற்றும் படகில் இருந்த 150 கிலோ மீனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் மத்திய உளவு பிரிவு போலீசார், கியூ பிரிவு போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஆகியோர், அந்த ஐந்து பேரும் மீன்பிடிக்க தான் வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் கடத்தலில் ஈடுபட வந்தவர்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.