ஒரே வருடத்தில் 200க்கும் மேற்பட்ட விமானங்களில் பறந்து திருட்டில் ஈடுபட்ட பலே கில்லாடி… சிக்கியது எப்படி?

ஒரே ஆண்டில் 200க்கும் மேற்பட்ட விமானப் பயணம் மேற்கொண்டு சக பயணிகளின் உடமைகளை திருடியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  டெல்லியைச் சேர்ந்த ராஜேஷ் கபூர் என்பவர் ஒரே வருடத்தில் 200-க்கும் மேற்பட்ட விமானங்களில் பயணித்து…

ஒரே ஆண்டில் 200க்கும் மேற்பட்ட விமானப் பயணம் மேற்கொண்டு சக பயணிகளின் உடமைகளை திருடியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

டெல்லியைச் சேர்ந்த ராஜேஷ் கபூர் என்பவர் ஒரே வருடத்தில் 200-க்கும் மேற்பட்ட விமானங்களில் பயணித்து சக பயணிகளிடம் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.  டெல்லி விமான நிலையத்தில் 2 பயணிகள் ரூ.27 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடுப்போனதாக புகார் அளித்த நிலையில் 2 விமானங்களின் சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்ததில் ராஜேஷ் கபூர் போலீசாரிடம் சிக்கினார்.

இதுகுறித்து டெல்லி காவல் துறை துணை ஆணையர் உஷா ரங்னானி கூறியதாவது;

“மூன்று மாத காலமாக டெல்லி விமான நிலையத்தில் பயணிகள் தங்களது உடமைகளை இழந்தது தொடர்பாக புகார்கள் வந்தன.  இது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்து,  குற்றவாளிகளை தேடி வந்தோம். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட பயணி ஒருவர் ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகளை இழந்தார்.  இதுபோன்று பிப்ரவரி 2 ஆம் தேதி,  அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்கு பயணித்த பயணி ஒருவர் ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகளை இழந்துள்ளார்.

இதனையடுத்து டெல்லி மற்றும் அமிர்தசரஸில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தோம்.  இரண்டு சிசிடிவி காட்சிகளிலும் ஒரே நபர் சந்தேகத்திற்கு இடமாக தோன்றினார்.  பின்னர் அவரின் தொலைபேசி நம்பரை விமான நிலைய அலுவலகத்தில் பெற்றோம்.  ஆனால் அவர் போலியான நம்பரை அளித்திருந்தார். தொடர்ந்து நாங்கள் நடத்திய விசாரணையில் அவர் ராஜேஷ் கபூர் (40) என்பதை கண்டறிந்தோம்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருட்டு செயலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். விமானத்தில் பயணித்த பயணிகளின் உடமைகளை திருடுவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.  வயதானவர்கள் தான் அவரது டார்கெட்.

பயணிகள் தங்களை பைகளை வைக்கும் கேபினில் உள்ள பொருட்களை யாருக்கும் தெரியாமல் திருடுவது அவரது முதல் பணி.  அது நடக்காத பட்சத்தில் குறிப்பிட்ட பயணிகளை டார்கெட் செய்து, அவர்களுக்கு அருகில் அமர்ந்து பொருட்களை திருடியுள்ளார்.  இதற்காக ஒரே ஆண்டில் சுமார் 200 முறை அவர் விமானத்தில் பயணித்துள்ளார்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.