அலோபதி மருத்துவ முறை குறித்து பாபா ராம்தேவ் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், அவரது ஒரிஜினல் வீடியோ பதிவினை உச்சநீதிமன்றம் இன்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.
பதஞ்சலி நிறுவனரும், யோகா குருவுமான பாபா ராம்தேவ் கடந்த சில தினங்களுக்கு முன் , ஹரித்வாரில் நடந்த யோகா முகாமில் அலோபதி மருத்துவம் குறித்து பேசிய வீடியோ சர்ச்சைக்குள்ளானது. அதில், அலோபதி மருத்துவம் முட்டாள்தனமான சிகிச்சை முறை எனவும், ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தவர்களை காட்டிலும், அலோபதி மருந்துகளால் தான் அதிக மரணம் நேரிட்டதாகவும் கருத்து தெரிவித்து இருந்தார்.
அலோபதி மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தி வருவதால் எம்பிபிஎஸ், எம்.டி. படித்த மருத்துவர்கள், யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தை பின்பற்ற தொடங்கியுள்ளதாகவும் கூறிய அவர், அடுத்த ஒரு ஆண்டுக்குள் 1,000 அலோபதி மருத்துவர்களை ஆயுர்வேத மருத்துவர்களாக மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இவரது பேச்சுக்கு இந்திய மருத்துவ சங்கமும், மருத்துவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஜூன்-1ம் தேதியை கருப்பு தினமாக அறிவித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் கருப்பு நிற பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் , அலோபதி மருத்துவ முறை குறித்து பாபா ராம்தேவ் பேசிய ஒரிஜினல் வீடியோவை சமர்ப்பிக்கும்படி பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. பாபா ராம்தேவ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியை, ஒரிஜினல் வீடியோவை சமர்ப்பிக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டனர். இதனையடுத்து அவர் சமர்பிக்கும் வீடியோவை இன்று உச்சநீதிமன்றம் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.







