திண்டிவனத்தில் ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் கவிழ்ந்து விபத்து 8 வயது சிறுமி
உட்பட 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கேரளாவின் பிரசித்த பெற்ற வழிபாட்டு தலங்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோயில். மகரஜோதி தரிசனத்தையொட்டி அங்கு தினமும் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் 8 மணி நேரம் காத்திருந்து தரிசம் செய்யும் அளவிற்கு அங்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
சென்னை தாம்பரம் பகுதியிலிருந்து 22 ஐயப்ப பக்தர்கள் தனியார் வேன் ஒன்றில்
சபரிமலைக்குச் சென்றனர். அவர்களின் வேன் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில்
பயணித்துக் கொண்டிருக்கும் போது, திண்டிவனம் டி.வி. நகர் என்ற இடத்தில், காலை 5:15 மணி அளவில் சென்றபோது வேன் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சிறிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 8 வயது சிறுமி உட்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பத்துக்கு மேற்பட்டோரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் டிரைவர் சந்திரசேகர் தூக்க கலக்கத்தில் வண்டியை பள்ளத்தில் விட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.







