அய்யா வைகுண்டரின் போதனைகளை மக்கள் தங்களது வாழ்வியலில் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் சமதர்ம சமநிலையை அடைய முடியும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று கன்னியாகுமரி வந்துள்ளார். அவரை வரவேற்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் தூத்துகுடி வந்தடைந்தார். இதனையடுத்து இன்று கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசாமி தலைமை பதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். பதி நிர்வாகம் சார்பில் அவருக்கு மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பதிக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் பின்னர் அய்யா வழி மக்களிடம் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்ததாவது..
”அய்யா வைகுண்டர் ஒரு தெய்வீக ஆத்மா. பாரதம் எனும் பாரம்பரிய வழி வந்தவர்.
எப்போதெல்லாம் தர்மம் வீழ்கிறதோ அப்போதெல்லாம் மனித உருவில் கடவுள் அவதரிப்பார். அதர்மத்தை ஒழிப்பதற்காக அவதாரம் எடுத்தவர் அய்யா வைகுண்டர்.
துரதிஷ்டவசமாக நமது சமூகத்தில் தவறான சில பழக்க வழக்கங்கள் இருந்தது.
குறிப்பாக சமூகத்தில் ஏற்றத்தாழ்வு, தீண்டாமை போன்ற பல தீய பழக்கங்கள்
இருந்தது. இது வெட்கக்கேடான விஷயம். பின்னர் பிரிட்டிஷாரால் நாம்
ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டோம். மனிதநேயம் மட்டும் தான் நமது கலாச்சாரத்தின் அடிப்படையாக இருந்தது.
அதர்மத்திற்கு எதிராக யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ அவர்களெல்லாம் கடவுள்
என்று அய்யா வைகுண்டர் கூறியுள்ளார். சாதி ,இனம் மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து மனிதர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் இதில் ஒரு அங்கம் தான் அய்யாவின் போதனைகளை மக்கள் தங்களது வாழ்வியலில் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் சமதர்ம சமநிலையை அடைய முடியும்.
– யாழன்