சென்னை அயோத்தியா மண்டபம் அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரப்படும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அயோத்தியா மண்டபம் அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரப்படுவதற்கு எதிராக ராம சமாஜம் அமைப்பு தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ராம சமாஜம் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது. இந்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, தமிழ்செல்வி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், முறைகேடு செய்ததற்கான முழுமையான ஆதாரங்கள் இல்லாமல் அயோத்தியா மண்டபம் அறநிலையத்துறைக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், முறையாக நோட்டீஸ் வழங்காமலேயே காவல்துறையினர் அத்துமீறி மண்டபத்தை கையகப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டது. இதனை அடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில், பக்தர்கள் தொடர்ந்து மண்டபத்துக்குள் சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளியை தொடர்ந்து நடத்தலாம் என்றும், கல்யாண மண்டபத்தில் முன்பதிவு செய்யப்பட்ட திருமண நிகழ்ச்சிகள் நடத்தி கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டது. மேலும், சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட 52 பேரும் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அயோத்தியா மண்டபம் அறநிலையத்துறைக்கு கீழ் கொண்டுவரப்படும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என தெரிவித்தனர். மேலும், இறுதி வாதத்திற்காக வழக்கு விசாரணையை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.








