உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று ஆவணி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1-30க்கு விஷ்வரூப தீபாராதனையுன், 2-00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 21-ம் தேதி 5ம் திருநாளான குடவருவாயல் தீபாராதனையும், 7-ம் திருநாளன்று (23-ம் தேதி) சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்திலும், 8-ம் திருநாளன்று (24-ம் தேதி) பச்சைசாத்தி கோலத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
மேலும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளன்று 26-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் காரணமாக ஆவணி திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் பிரகாரத்தில் மட்டுமே நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு தேரோட்டமும் நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஆவணி திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவிழா நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான
பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவிற்கு தேவையான
அனைத்து அடிப்படை வசதிகளும் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம்
சார்பில் செய்யப்பட்டுள்ளது.