அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணைக் குழுவுக்கு மேலும் அவகாசம் வழங்கியது தமிழ்நாடு அரசு.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள், ஊழியர்கள், புகார்தாரர்கள் என்று அனைவரிடமும் விசாரணை நிறைவுபெற்றது.
இதனிடையே வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க கால அவகாசம் கோரி ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், “இறுதிக்கட்ட அறிக்கையைத் தயார் செய்ய வேண்டியிருப்பதால் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது, கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்பு அறிக்கை சமர்ப்பிக்க 10 நாட்கள் அவகாசம் தேவை” என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் சூரப்பா மீதான விசாரணைக் குழுவுக்கு தமிழ்நாடு அரசு கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. 14ம் தேதிக்கு பின் தளர்வுகள் அறிவிக்கப்படும் பட்சத்தில் அதிலிருந்து 10 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது உயர்கல்வித் துறை.







