“மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கட்டாயம்”- பள்ளிக்கல்வித்துறை

அரசு & உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் வீட்டுப்பாடம்(Assignments) வழங்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார்…

அரசு & உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் வீட்டுப்பாடம்(Assignments) வழங்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு படைப்பாற்றலை ஊக்கப்படுத்தும் வகையில், வாழ்த்து அட்டை தயாரித்தல், படம் வரைதல் போன்ற செய்முறை வீட்டுப்பாடங்கள் தரப்பட வேண்டும். 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை எழுதுதல், சுயவிவரக் குறிப்பு வரைதல் போன்ற வீட்டுப்பாடங்கள் தரப்பட வேண்டும். 9, 10ம் வகுப்பினருக்கு புத்தக விமர்சனம் போன்ற வீட்டுப்பாடங்கள் தரப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளிக்கல்வித்துறையில் இருந்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படும் வீட்டுப்பாடங்களையே, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். கற்றல் – கற்பித்தல் இடைவெளி இருப்பதாக தெரியவந்துள்ளதால், அதை நிவர்த்தி செய்யவே வீட்டுப்பாடம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக நந்தக்குமார் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுப்பாடம் தரப்படும் போது, அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்துமுடிக்குமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுப்பாடம் விவரம், மாணவர்கள் சமர்ப்பிக்கும் விவரம் போன்றவற்றை உரியமுறையில் பராமரிக்கவும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.