பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க, அலுவல் ஆய்வு கூட்டம் இன்று நண்பகலில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேரவை கூட்டத்தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். இன்று ஆளுநர் உரையாற்றிய பிறகு, பேரவை ஒத்திவைக்கப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன்பின், நாளை (செவ்வாய்கிழமை) பேரவை மீண்டும் கூடி, காங்கிரஸ் உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால், அன்றைய நாள் முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்படும்.
இதைத்தொடர்ந்து புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் புதன்கிழமை முன்மொழியப்பட்டு அந்த தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெறும். இதில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் உரையாற்றுவர். தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவார். இதன்பிறகு கூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் பேரவைத்தலைவர் மு.அப்பாவு ஒத்தி வைப்பார்.
சட்டம்-ஒழுங்கு, பொங்கல் தொகுப்பு, ஆசிரியர்கள், செவிலியர்கள் போராட்டப் பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இந்த பிரச்னைகள் சட்டப்பேரவையில் எதிரொலிக்கும் என தெரிகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு உரிய பதில்களை அளிக்க அரசு தரப்பும் தயாராகி வருகிறது.