சட்டமன்ற தேர்தல் கூடுதல் செலவினத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று, அதன் முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியாகின. வாக்குப் பதிவு மையத்தை தயார் செய்வது, வாக்கு எண்ணிக்கை, பயணங்கள், அலுவலக செலவுகள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதியம் என தேர்தல் பணிகளுக்கு பல கோடி ரூபாய் செலவானது.
சட்டமன்ற தேர்தல் செலவிற்காக 617.75 கோடி ரூபாய் முதலில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், தொலைபேசி, எரிபொருள், வாகனத்திற்கான வாடகை, விளம்பரம் உள்ளிட்டவற்றுக்காக 126.18 கோடி ரூபாய் கூடுதலாக செலவு செய்யப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கூடுதலாக கோரிய 126 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதுபோலவே, பணம் செலுத்தப்படாத பில்களுக்காக மேலும் 48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.







