வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் இருந்து நேற்று காலை புறப்பட்ட சசிகலா 23 மணி நேர பயணத்திற்குப் பின்னர் இன்று காலை சென்னை வந்தார். வழிநெடுகவும் அவருக்கு அமமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனத் தெரிவித்த அவர், ஓரணியில் நின்று பொது எதிரியை சந்திக்க அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். சென்னை தி.நகரிலுள்ள இல்லத்தில் ஓய்வெடுக்கும் சசிகலா, அரசியல் விவகாரங்கள் தொடர்பாக விரைவில் ஆலோசிக்கவுள்ளார்.
இந்த நிலையில் சசிகலா வருகைக்குப் பின்னர் செய்தியாளர்களிம் பேசிய டிடிவி தினகரன், சசிகலா உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று தன்னிடம் தொலைபேசியில் விசாரித்ததாக தெரிவித்தார். சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ஆலோசனை பெறப்படும் என கூறிய டிடிவி தினகரன், ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டவுடன் சசிகலா அங்கு செல்வார் என குறிப்பிட்டார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகர் மற்றும் தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதி என 2 தொகுதிகளில் தான் போட்டியிடப்போவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்







