விசாரணைக் கைதிகளை தாக்கிய ஏஎஸ்பியை கைது செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

விசாரணைக் கைதிகளின் பல்லை உடைத்தும், வாயைக் கிழித்தும் கொடுமைப்படுத்திய அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளரை கைது செய்ய வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், நெல்லை…

விசாரணைக் கைதிகளின் பல்லை உடைத்தும், வாயைக் கிழித்தும் கொடுமைப்படுத்திய அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளரை கைது செய்ய வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை, காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கருங்கற்களால் பற்களை உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு உதடுகளிலும், கன்னத்திலும் குருதி வரும் வரை தாக்கியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

குற்றம் செய்தவர்களை மட்டுமின்றி, புகார் கொடுக்க வந்தவர்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறார். ஒருவர் புதிதாக திருமணமானவர் என்று கூறியதால், அவரை உயிர்நாடியில் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார். தாக்கப்பட்டவர்கள் அதற்காக மருத்துவம் பெறுகின்றனர். உடல்களில் அவர்கள் தாக்கப்பட்டதற்கான தழும்புகள் உள்ளன.

விசாரணை என்ற பெயரில் பல்வீர்சிங் அரங்கேற்றியுள்ள கொடுமைகள் மன்னிக்க முடியாதவை. மனநல பாதிப்புக்குள்ளானவர்கள் மட்டுமே இத்தகைய செயல்களில் ஈடுபடுவர். பல்வீர்சிங் போன்ற மனநிலை கொண்டவர்கள் காவல்துறை உயர்பதவிகளில் இருந்தால் மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது.

எனவே உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளையும், மனிதநேயத்தையும் மதிக்காத காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர்சிங் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அவர் மீது உடனடியாக வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவு வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.