பாகிஸ்தான் அணி வீரர்கள் உட்பட அனைத்து அணி வீரர்களுக்குமான பாதுகாப்பை அரசு உறுதி செய்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் நாளை தொடங்கி, வரும் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் சர்வதேச ஹாக்கி சமேளன தலைவர் தயூப் இக்ரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் வகையில் விளையாடும் என நம்பிக்கை தெரிவித்த அவர், தமிழ்நாட்டை விளைட்டு தலைநகரமாக மாற்றுவோம். அடுத்த ஆண்டு கேலோ இந்தியா நடைபெறவுள்ளது. விரைவில் பார்முலா 4 பந்தயத்தை நடத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பல்வேறு விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய அணியில் விளையாடிய பிரான்சிஸ் ரங்கநாதன் உட்பட அனைத்து முன்னாள் ஹாக்கி வீரர்களும் கெளரவிக்கப்படுவர். ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி வீரர்கள் உட்பட அனைத்து அணி வீரர்களுக்குமான பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்.
மைதானத்தில் உள்ள லிஃப்ட் கோளாறு குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி , சிறப்பான முறையில் மைதானம் புனரமைக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை முறையில் மைதானத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. போட்டி துவங்குவதற்கு முன்பாக அனைத்து ஏற்பாடுகளும் முழுமை பெறும்.
சென்னையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களை போட்டியை காண அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்கள் தொகுதியில் குறைந்தது 100 குழந்தைகளை அழைத்து வருமாறு அறிவுறுத்தி உள்ளோம். ஐபிஎல் ஃபேன் பார்க் போன்று தமிழகம் முழுவதும் 40 இடங்களில் போட்டிகளை காண ஏற்பாடு செய்யப்படும், அவற்றில் இலசவசமாக
பொதுமக்கள் போட்டிகளை கண்டு களிக்கலாம்.
அதனை தொடர்ந்து பேசிய சர்வதேச ஹாக்கி சமேளன தலைவர் தயூப் இக்ரம், ஆசிய ஹாக்கி போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்ததன் மூலம் இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது என தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா









