லகீம்பூா் வன்முறை: மத்திய அமைச்சர் மகன் விசாரணைக்கு ஆஜர்

உத்தர பிரதேசத்தில் லகீம்பூா் கெரியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இன்று ஆஜரானார். உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி…

உத்தர பிரதேசத்தில் லகீம்பூா் கெரியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இன்று ஆஜரானார்.

உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் சொந்த ஊரான திகுனியாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக இருந்தது. அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டுவதற்காக விவசாயிகள் திகுனியா-பல்பீர்பூர் சாலையில் திரண்டனர்.

அவர்கள் மீது பா.ஜ.கவினர் கார் மோதியதில் 4 விவசாயிகள், பத்திரிகையாளர் ஒருவர், பாஜக தொண்டர்கள் 2 பேர், கார் ஓட்டுநர் என 8 பேர் உயிரிழந்தனர். பாஜகவினா் வந்த காா்களில் ஒன்றில் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வன்முறை விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர். மேலும் ஆசிஸ் மிஸ்ராவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. இந்த விவகாரத்தை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுபற்றி கேள்வி எழுப்பியது. அப்போது அவர் இன்று ஆஜராக இருப்பதாக வழக்கறிஞர் தெரிவித்திருந்தனர். அதன்படி, ஆசிஷ் மிஸ்ரா போலீஸ் விசாரணைக்கு இன்று ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.