தமிழ்நாட்டில் வரும் 15ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “அசானி” தீவிர புயல் இன்று காலை 02:30 மணி அளவில் புயலாக வலுவிழந்து 08:30 மணி அளவில் ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக கோடை நேரத்திலும் தமிழ்நாடு முழுக்க அநேக இடங்களில் கன மழை பெய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அசானி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கூடும். இன்று வட தமிழகம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
நாளை முதல் 15ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.