திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் கைதான ஆரிப், ஆஜாத்-க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி கவியரசன் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம் ஆகிய பகுதியில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி அதிலிருந்து 72 லட்சத்து 78 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். ஒரே நாளில் திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கொள்ளையில் வடமாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அந்த விசாரணையில் ஹரியானாவை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.
அதில், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை கும்பலின் தலைவன் முகமது ஆரிப் (வயது 35) மற்றும் ஆசாத் (வயது 37) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் அரியானாவில் கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். கொள்ளையர்கள் 2 பேரையும் மார்ச் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 வடமாநில கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் . கர்நாடக மாநிலம் கோலாரில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் குர்திஷ் பாஷா மற்றும் அஷ்ரப் உசேனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொள்ளையர்கள் கர்நாடகாவில் இருந்து அரியானாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததும் போலீசார் நடத்திய விசாரணை தெரியவந்தது.
இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய கொள்ளையர்களான ஆரிப் மற்றும் ஆஜாத் ஆகியோரை நீதிபதியின் உத்தரவின் பெயரில் தமிழ்நாடு காவல்துறை கஸ்டடியில் எடுத்து விசாரணையை தொடங்கியது. முதற்கட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் கலசப்பாக்கம் ஆகிய இடங்களில் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போளூர் காவல் நிலையத்தில் குற்றவாளிகளை அழைத்து வந்து அவர்களிடம் போளூர் டிஎஸ்பி குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் விசாரணையை தொடங்கினர். மேலும் இரவு முழுவதும் விடிய விடிய கொள்ளையர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் முக்கிய கொள்ளையர்களான ஆரிப் மற்றும் ஆஜாத் ஆகிய இருவரையும் தமிழ்நாடு காவல்துறை திருவண்ணாமலை நீதிமன்றத்தில் நீதிபதி கவியரசு அமர்வு முன்பு ஆஜர்படுத்தியது . அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கவியரசு கொள்ளை சம்பவத்தில் கைதான ஆரிப், ஆஜாத்-ஐ மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
- பி. ஜேம்ஸ் லிசா