புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிந்தாலும் பெரும்பாலானோர் புகைப்பிடிப்பதைக் கைவிடுவதில்லை. உயிர்களைக் கொல்வதில் இரண்டாம் இடம் வகிக்கிறது புகையிலை. புகையிலை புற்றுநோயை உண்டாக்கும் என சிகரெட் அட்டைகளில் அருவருக்கத்தக்க வகையிலான படங்கள், வாசகங்கள் இருந்தாலும், புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை இதுவரை குறைந்தபாடில்லை.
ஆரம்பகட்டத்தில் புகைப்பிடிக்கும்போது புகையிலையில் உள்ள நிகோடின் போன்ற ரசாயனங்கள் மூளைக்குச் செல்லும். அதனால், ரிலாக்ஸாக இருப்பது போன்றும், தெளிவாக சிந்திப்பது போன்றும் நமக்குத் தோன்றும். தொடக்கத்தில் இதுபோன்ற உணர்வுகள் ஏற்படுவதால் அடிக்கடி புகைப்பிடிக்கத் தோன்றும். நாள்பட நாள்பட புகைப்பிடித்தால் தான் இயல்பாகவே இருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிடும். ஒருவர் தன் வாழ்க்கை முழுவதும் புகைப்பிடிப்பதால் 10 முதல் 11 ஆண்டுகள்வரை தனது ஆயுள்காலத்தை இழப்பதாகக் கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. மேலும், புகையிலையால் 8 விநாடிக்கு ஒருவர் உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறது.
புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிந்து கொள்வோம்…
- சாலை விபத்துகள், உயிரிழப்புகள், கொலைகள் போன்றவற்றைவிட புகையிலையால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம்.
- கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய், கருச்சிதைவு, ஆண்மைக் குறைவு உள்ளிட்வை ஏற்படும்.
- புகைப்பிடிப்பதால் கண், மூளை, காது, மூக்கு, பல், வாய், தசை, ரத்த நாளங்கள் போன்ற அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும்.
- புகைப்பிடிப்பவர்களில் 5இல் ஒருவர் மன அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
- புகைப்பிடிப்பதால் கண், மூளை, காது, மூக்கு, பல், வாய், தசை, ரத்த நாளங்கள் போன்ற அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும்.
- புகைபிடிப்பதால் கன்னம், நாக்கு, சுவாசக் குழாய் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளைத் திட்டுகள் உருவாகி நாளடைவில் அது புற்றுநோயாக மாறிவிடும்.
- சொரியாஸிஸ், கண்புரை, காது கேளாமை, இதய நோய், வயிற்றுப்புண் போன்றவை ஏற்படும்.
- புகைப்பிடிப்பவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இது நாளடைவில் மரணத்தைக்கூட ஏற்படுத்தும்.
புகையிலையால் ஏற்படும் பிரச்னை குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், பல்வேறு விதமான வகையில் சந்தையில் போதைப் பொருள்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. புகையிலைப் பழக்கத்தில் இருந்து விடுபட பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. மருத்துவர்களை ஆலோசிப்பதன் மூலமும், மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலமும் புகையிலை எனும் அரக்கனிடம் இருந்து கட்டாயம் விடுபடலாம் என கூறுகின்றனர் நிபுணர்கள்.
- த.எழிலரசன்








