சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் 20 ரூபாய் தேநீருக்கு வரியுடன் சேர்த்து 70 ரூபாய் செலுத்தியுள்ளதற்கான ரசீது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி – போபால் தடத்தில் இயங்கும் சதாப்தி ரயிலில் ஜூன் 28-ஆம் தேதி பயணி ஒருவர் பயணித்துள்ளார். காலை நேரம் என்பதால் அப்பயணி தேநீர் ஆர்டர் செய்த நிலையில், விலையைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். ரயில்வே நிர்வாகம் அளித்த ரசீதில் தேநீரின் விலை ரூ. 20 என்றும், சேவைக் கட்டணம் ரூ. 50 என்றும் மொத்தமாக ரூ.70 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த கட்டணத்தை செலுத்திய பயணி, தேநீருக்கான பில்லை அப்படியே சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இது பகல் கொள்ளையாக இருக்கிறது என தனது பதிவில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதற்கு ரயில்வே நிர்வாகம் கடந்த 2018 ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி விளக்கம் கொடுத்துள்ளது. ராஜ்தானி, சதாப்தி போன்ற ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ரிசர்வேஷனின்போது உணவை முன்பதிவு செய்யவில்லை எனில் அதற்கு சேவைக் கட்டணம் ரூ. 50 வசூலிக்கப்படும். அது தேநீர், காபி, உணவு என அனைத்துக்கும் பொருந்தும் என்றும், மற்றபடி பயணியிடமிருந்து கூடுதல் கட்டணம் ஏதும் வசூல் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
-ம.பவித்ரா







