’மாண்டஸ்’ புயல் இன்று மாமல்லபுரம் பகுதியில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில், அங்கு மூன்று பிரிவுகளாக பிரிந்து பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரைக்காலில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே, மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்றும், மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் சுமார் 120 பேர், படகுகள், ரம்பங்கள், ராட்சத மோட்டார்கள், ஒலிப்பெருக்கிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் மூன்று குழுக்களாக பிரிந்து மாமல்லபுரம் கொக்கிலமேடு பகுதியில் 40 பேர் கொண்டு குழுவும், பூஞ்சேரி பகுதியில் 40பேர் கொண்ட குழுவும், திருப்போரூர் பகுதியில் 40 பேர் கொண்ட குழுவுமாகப் பிரிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.