“பள்ளிகளில் போதைப் பொருளுக்கு எதிரான கண்காணிப்புக் குழு”

பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தடுப்பதற்கு பள்ளிகளில் போதைப்பொருளுக்கு எதிரான கண்காணிப்பு குழு அமைக்கப்பட உள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம்…

பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தடுப்பதற்கு பள்ளிகளில்
போதைப்பொருளுக்கு எதிரான கண்காணிப்பு குழு அமைக்கப்பட உள்ளதாக மத்திய
போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி போதைப் பொருளுக்கு எதிரான நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் மாதம் முழுவதும் பல்வேறு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் சில தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சென்னை மண்டலம் மற்றும்
தமிழ்நாடு போதை மறுவாழ்வு மையங்கள் சங்கம் சார்பில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல
இயக்குனர் அரவிந்தன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக
போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டு போதைப்பொருள் பயன்பாடுகளின் தீமை விளக்கும் வகையில் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அரவிந்தன், பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருவதை
தடுப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருவதாகவும் அதன்படி
பள்ளிகளில் போதைப் பொருளுக்கெதிரான கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

கண்காணிப்பு குழுவில் கவுன்சிலர், ஆசிரியர், மாணவர் பெற்றோர்
ஆகிய 4 பேர் இடம் பெறுவார்கள் எனவும் பள்ளிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தை
கண்காணிப்பதற்கும் தடுப்பதற்கும் இந்த குழு பெரும் உதவியாக இருக்கும் எனவும் அவர்
தெரிவித்தார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.