தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப். 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து பல நாட்கள் ஆன நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் விடுபட்ட மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து தற்போது, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப். 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.
ஜனவரி 28ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்படுவதாகவும், பிப்.4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் எனவும் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். அதேபோல பிப்.5ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை எனவும், பிப்.7ம் தேதி மனுவை வாபஸ் பெற இறுதி நாள் என்றும் அதேபோல வாக்கு எண்ணிக்கை பிப்.22ம் தேதி நடைபெறம் என்றும் அறிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவிப்பு;
மாநிலம் முழுவதும் 31,029 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடத்தப்படும். 1,374 மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு நேரடி தேர்தலும், 1,298 பதவிகளுக்கு மறைமுக தேர்தலும் நடத்தப்படும்.
அதேபோல நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர், மேயர், துணை மேயர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச்-4ல் நடைபெறும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரசு சார்பில் புதிய திட்டங்கள் அறிவிக்க முடியாது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தலாம். தனி நபர் ரூ.50,000 வரை கொண்டு செல்லலாம். பேரணி, தெருமுனைக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள், பறக்கும் படையினரின் விவரங்கள் நாளை வெளியிடப்படும். வேட்பாளர்களை கடத்துவது, மிரட்டுவது குறித்து புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னைக்கு மட்டும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களுக்கு தலா ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணியில் 1.33 லட்சம் அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். 80,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என ஆணையர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
அதேபோல தேர்தலில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து…
முகக்கவசம் கட்டாயம் என்றும், அதிக கூட்டம் சேர்க்க தடை, அனைத்து அலுவலங்களுக்கு முன்பாக கிருமி நாசினி இருக்க வேண்டும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, “அனைத்து மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். முடிந்த வரைவில் தேர்தல் அதிகாரிகளுக்கு இணையதளம் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும். வீடு வீடாக பிரச்சாரம் செய்ய 3 பேருக்கு மட்டும் அனுமதி. விதிளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை. அறிகுறி உள்ளவர்கள் மாலை 5 மணி முதல் 6 வரை வாக்களிக்கலாம். முகவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.